புதன், 11 மார்ச், 2009

"சரித்திரத்தில் போர்"

அரசியல் திருவும் விளம்பரப் பொலிவும் வாய்க்கப்பெறாத் தமிழ்க்கவிஞர்களின் கவிதையே இப்பகுதியில் இடம்பெறும்.
இன்று நாம் காணவிருப்பது கவிஞர் தளவை இளங்குமரன் அவர்களின் கவிதையாகும்.நெல்லையில் பிறந்த இக்கவிஞர்
செங்கல்பட்டு மருத்துவமனியில் கதிரியக்கத் தொழில்நுட்பப் பணி புரிந்து
இந்த ஆண்டு பணிநிறைவு பெற்றுள்ளார்.
குழந்தைகளுக்காக ;பிஞ்சுப்பலா' என்னும் கவிதைத் தொகுதியையும்
இளைஞர்களுக்காக 'காதல் பலா'என்னும் தொகுதியையும் வழங்கிய இவர்
அண்மையில் 'ஞான உலா' என்னும் தொகுதியை வெளிக்கொணர்ந்துள்ளார்.சமூக ஓர்மையும் தமிழின எழுச்சியும் தாங்கிய
கவிதைகளின் தொகுப்பாக அந்நூல் அமைந்துள்ளது.
அந்நூலிலிருந்து"சரித்திரத்தில் போர்" என்னும் தலைப்பிலமைந்த பினவரும் கவிதை வழங்கப்பட்டுள்ளது.


"சரித்திரத்தில் போர்"

-கவிஞர் தளவை இளங்குமரன்

நாள்தோறும் பழிமனத்தால்

நன்றிகெட்ட இழிகுணத்தான்

நசுக்குகிறான் தமிழினத்தைத் தாமும்-அந்த

நீள்சோகக் கதையனைத்தும்

நெஞ்சதிரச் செவிமடுத்தும்

நெடுமரமாய்க் கிடப்பதுவோ நாமும்?



ஆழ்கடலின் நீலவுடை

அணிந்திருக்கும் கோலவுடல்

ஆகிறதே தமிழ்ரத்தச் சேறும்-அந்தப்

பாழ்நிலையைச் சகிப்புடனே

பார்த்திருக்கச் சாய்க்கடையோ

பாராண்ட நம் ரத்த ஆறும்?



சாய்ந்தாடும் பூவனத்தைச்

சந்தனத் தேர்ச் சேயினத்தைச்

சருகாகக் கொளுத்துகிற நேரம்-நாமும்

பாய்ந்தோடித் தடுக்காமல்

பதிலடிகள் கொடுக்காமல்

பஞ்சாங்கம் படிப்பதுவோ வீரம்?



தாய்க்குலத்தை நடுத்தெருவில்

தான் நிறுத்திச் சிங்களத்துத்

தறுதலைகள் பறிப்பதுவோ மானம்?-அந்த

நாய்க்குலத்தைப் புடைக்காமல்

நல்லறிவு புகட்டாமல்

நாமிருந்தால் பரம்பரைக்கே ஈனம்!



வீழ்ந்தோமேல் தனியீழ

விடுதலைக்கே வீழ்ந்தோராய்

விட்டகல்வோம் சரித்திரத்தில் பேரும்-இனி

வாழ்ந்தோமேல் தமிழீழ

வரலாற்ருப் பூமியில்தான்

வாழ்வதெனக் கொதித்தெழுவோம் வாரும்!







கவிஞரின் உணர்வு நமக்கும் தேவைதானே?
அன்புடன்,
மறைமலை

இந்தியா ஒரு நாடெனல் கூடுமோ?

பைந்தமிழ்ப் பாவலர் மு.வே.கங்காதரன் அவர்களின் கவிதை ஒன்றைக் காண்போம்.
தனித்தமிழ்ப் பாவலர் பெருஞ்சித்திரனார்நெறி போற்றித்
தூய தமிழில் பாக்கள் பலவற்றைப் படைத்தளித்துள்ள இவர்
சென்ற ஆண்டு ஈரல் நோயால் இயற்கை எய்தினார்.

தமிழ்,தமிழினம் என்றெ எப்போதும் சிந்தைசெய்து
ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
கணக்காசிரியராகப் பணியாற்றிப் பின் தமிழ் முதுகலை பயின்று
தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர்
தமது மறைவு வரை,தமிழின எழுச்சிப் பாடல்களையே வெளியிட்டுவந்தார்.

இந்தியா ஒரு நாடெனல் கூடுமோ?

-பாவலர் மு.வே.கங்காதரன்

ஈழம் இந்நாள் எரிவதைக் காண்கிறோம்

ஏனோ இன்னும்நாம் கிளர்ந்தெழவில்லையே!

ஆழும் நீரினால் பிரிந்துளோம் ஆயினும்

அன்னையாந் தமிழ் மாந்தரே அல்லமோ?

பாழும் சிங்களக் காடையர் பண்பிலார்

பாருமிழ்ந்திடப் பல்வகைக் கேடுகள்

தாழும் சாடியே செந்தமிழ்ச் சாதியைத்

தகுதி நீங்கியே தாழ்வுமுற்றாரரோ!



பேசித் தீர்க்குமோர் பெருநெறி நீங்கினர்;

பேசித் தீர்ப்பதாய்ச் சொல்வது போலியே!

ஏசி வாழ்ந்தவர் இடும்பைகள் சூழ்வரே

என்றும் ஒன்றெனக் கூடியே வாழ்வரோ?

கூசிடார் மனம் கொல்வதும் தேர்ந்தனர்

கொடுமைக் கென்றுமோர் எல்லையே குறித்திலர்

மாசில் நந்தமிழ் மாந்தரும் மகிழ்வுற

வாழும்நாள் வரும் வாய்ப்பெதும் இல்லையோ?



தமிழன் சிங்களர் தம்மினால் சிதைவனோ?

தக்கார் எண்ணியே தக்கன சூழ்வரோ?

அமைதி காணவே ஆவன செய்வரோ?

அழிந்துபோகுமோ அங்குள தமிழினம்?

அமைதி காப்பதோ அம்மவோ இந்தியம்?

அடிமையாவதோ அன்னைத் தமிழினம்?

இமையும் நம்முடைத் துன்பமே எண்ணிடா

இந்தியா வொருநாடெனல் கூடுமோ?




(ஈழம்:பன்மலர்ச் சோலை-பக்கம்-41)

பத்து ஆண்டுகள் முன்னர் எழுதப் பெற்ற இக்கவிதை

இன்னும் ஈழத் துயர்நிலை தொடர்வதை உருக்கமுடன்
உணர்த்துகிறது.

நன்றி:முனைவர் மறைமலை.